செல்போன் பறிமுதல்... சக மாணவர்கள் முன் அவமானம்...! - கன்னியாகுமரியில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை...!
Cell phone confiscated Humiliation front fellow students Nursing student commits suicide by jumping from college floor Kanyakumari
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் செல்போன் கொண்டு வந்ததாக கூறி மாணவியை கல்லூரி முதல்வரும் ஆசிரியர்களும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவி, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்திப்பார பகுதியைச் சேர்ந்தவர் அன்சிஜி, 21. இவர் கருங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்ததாக கூறி, கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் ஆசிரியர்கள், சக மாணவிகள் முன்னிலையில் அன்சிஜியை கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரது செல்போனையும் கல்லூரி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அன்சிஜி கடும் மனவேதனைக்கு ஆளானதாக தெரிகிறது. இதுதொடர்பாக தனது தோழிகளுக்கு அனுப்பியதாக கூறப்படும் குரல் பதிவில், கல்லூரி நிர்வாகத்தினர் தன்னை தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தி வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.மன உளைச்சலில் இருந்த அன்சிஜி, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை சக மாணவிகளும், கல்லூரி ஊழியர்களும் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அன்சிஜிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மாணவி அன்சிஜி பரிதாபமாக உயிரிழந்தார். இளம் வயதில் மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலைமறைவாக உள்ளவர்களை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், கல்லூரி வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செல்போன் விவகாரத்தில் தொடங்கிய இந்த சம்பவம் மாணவியின் உயிரிழப்பில் முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Cell phone confiscated Humiliation front fellow students Nursing student commits suicide by jumping from college floor Kanyakumari