டாஸ்மாக் போதையால் அரங்கேறிய கொடூரக் கொலை...! தூத்துக்குடியில் நடுங்க வைக்கும் சம்பவம்... தப்பியோடிய கொலையாளிகளுக்கு வலை...!
brutal murder committed under influence Tasmac shocking incident Thoothukudi net escaped murderers
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே, நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு விபரீதமாக மாறியதில், டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரம் கிராமத்தின் மேற்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் மலைராஜ் (30). திருமணம் ஆகாத இவர், டைல்ஸ் பதிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு மலைராஜ் தனது நண்பர்கள் 3 பேருடன் கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிக்கு சென்று மது அருந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பேச்சுவார்த்தை திடீரென வாக்குவாதமாக மாறி, பின்னர் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த 3 பேரும் தங்களிடம் இருந்த அரிவாளால் மலைராஜை சரமாரியாக வெட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இரவு வெகுநேரமாகியும் மகன் வீடு திரும்பாததால், அவரது தந்தை மாரியப்பன் இன்று காலை அவரைத் தேடி சென்றார். அப்போது காட்டுப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் மலைராஜ் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து உடனடியாக ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள், மலைராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், தப்பியோடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
brutal murder committed under influence Tasmac shocking incident Thoothukudi net escaped murderers