மண்ணுக்கு அடியில் ஒளிந்திருந்த பண்டைய தமிழர் அடையாளம்...! கீழடி அகழாய்வில் கிடைத்த மீன் உருவப் பானை... பாண்டியர் தொடர்பா...?
Ancient Tamil identity hidden beneath soil Fish shaped pot found Keezhadi excavations Is it related Pandyas
சிவகங்கை திருப்புவனம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழடி பகுதியில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் இதுவரை 10 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த ஆய்வுகளின் மூலம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டும் ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அந்தப் பழமையான பொருட்கள் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதனை காண பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என தினமும் ஏராளமானோர் கீழடிக்கு வருகை தருகின்றனர்.அதேபோல், அகழாய்வு நடைபெற்ற இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகமும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

பழங்கால கட்டிட அமைப்புகள் மற்றும் தொல்லியல் சான்றுகளை நேரடியாக பார்வையிடும் வாய்ப்பு கிடைப்பதால், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் இப்பகுதியை பார்வையிட்டு வருகின்றனர்.11-வது கட்ட அகழாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் புதிய முக்கிய தொல்லியல் சான்று ஒன்று கிடைத்துள்ளது.
முதற்கட்டமாக 9 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், உறை கிணறுகள், சுடுமண் பானைகள், சுருள் வடிவ மற்றும் பீப்பாய் வடிவ வடிகால் அமைப்புகள், மூடிய மற்றும் திறந்த நிலையில் இருந்த கால்வாய் அமைப்புகள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதில், முதன்முதலில் தோண்டப்பட்ட குழியில் சுமார் 160 செ.மீ. ஆழத்தில், 20 செ.மீ. விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானை முழுமையாக கிடைத்துள்ளது. இந்தப் பானையின் மேற்பகுதியில் மீன் உருவம் கோட்டுச் சித்திரமாக பொறிக்கப்பட்டிருப்பது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கீழடியில் ஏற்கனவே மீன் உருவம் பொறிக்கப்பட்ட உறை கிணறு மற்றும் பானை ஓடுகள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது மீன் உருவம் கொண்ட முழுமையான பானை கண்டெடுக்கப்பட்டிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடி பகுதியில் வாழ்ந்த மக்கள் கலை, தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு முன்னேறிய சமுதாயமாக இருந்திருக்கலாம் என்பதற்கான முக்கிய சான்றுகளாக இந்தத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் கருதப்படுகின்றன.
English Summary
Ancient Tamil identity hidden beneath soil Fish shaped pot found Keezhadi excavations Is it related Pandyas