நோ டாக்ஸ்... நோ காம்ப்ரமைஸ்...! - தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை பேச்சே கிடையாது...! - ராகுல் காந்தி அதிரடி
No Talks No Compromise There no talk until Dharmendra Pradhan steps down Rahul Gandhi action
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடாளுமன்றத்தில் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து 4 நாட்களாக கடும் அமளி நிலவி வருகிறது. இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவை கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

இந்த பரபரப்பான சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி தெரிவித்ததாவது,"நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்களிடம் விவாதத்தை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டால், அதற்கு அவர் பதிலளிப்பது இயல்பான நடைமுறை.
ஆனால், கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு பதிலளிக்க நான் எழுந்தபோது, எனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனது ஒலிவாங்கியும் அணைக்கப்பட்டது.எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க விரும்புகிறேன். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள் மூன்று.
முதலாவதாக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக, மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை, குறிப்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை, எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அல்லது விவாதத்திலும் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
English Summary
No Talks No Compromise There no talk until Dharmendra Pradhan steps down Rahul Gandhi action