நெல்லை மாநகரில் பட்டப்பகலில் நேர்ந்த கொடூரம்...! காதலித்து கரம் பிடித்த பெயிண்டர் வெட்டிப் படுகொலை...! - முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உடல் மீட்பு...!
brutal incident broad daylight Nellai city painter who fell love and stabbed death Body recovered disfigured face
நெல்லை மாநகரை உலுக்கிய கொடூரச் சம்பவமாக, காதல் திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்த 37 வயது தொழிலாளி ஒருவர், பட்டப்பகலில் மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்த குருநாதனின் மகன் ஆவுடையப்பன் (37), பெயிண்டிங் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை நெல்லை டவுன் சங்கரன்கோவில் சாலையில் உள்ள கோவில் அருகே ஆவுடையப்பன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.திடீரென ஏற்பட்ட வாக்குவாதம் சில நொடிகளில் கொடூர தாக்குதலாக மாறிய நிலையில், மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்த தாக்குதலில் ஆவுடையப்பனின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு கடுமையாக சிதைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.
தகவலறிந்து அங்கு வந்த ஆவுடையப்பனின் மனைவியும், உறவினர்களும் உடலை பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது.இதனைத் தொடர்ந்து, "கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை அங்கிருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்" என்று உறவினர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவாக கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையடுத்து, ஆவுடையப்பனின் உடல் உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்தச் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள், முன்விரோதம் காரணமா, காதல் திருமண பின்னணியில் ஏற்பட்ட பிரச்சினையா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவம் நடைபெற்ற பகுதியில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டதுடன், சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
brutal incident broad daylight Nellai city painter who fell love and stabbed death Body recovered disfigured face