ராஜபாளையம் அருகே சட்ட விரோதமாக கருந்திரி உற்பத்தி செய்தபோது வெடிவிபத்து; அசாம் பெண் பலி; 04 பேருக்கு காயம்..!
Assam woman killed in explosion while illegally manufacturing blackpowder fuses near Rajapalayam
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் சட்ட விரோதமாக கருந்திரி உற்பத்தி செய்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வட மாநில பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலேயும் 04 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பகுதியில் கல் குவாரி அருகே உள்ள செட்டில் சட்டவிரோதமாக கல்குவாரிகளுக்கு வெடி வைக்க பயன்படுத்தும் கருந்திரி உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. இங்கு அசாம் மாநில தொழிலாளர்கள் கருந்திரி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) செட்டில் வெல்டிங் வேலைக்காக கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கோடீஸ்வரன், அவரது மகன் அழகுநம்பி ஆகியோர் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மாலை 04:30 மணியளவில் செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கருந்திரி மற்றும் கரிமருந்தில் தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ராஜபாளையத்தில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தின் போது, அங்கு பணிபுரிந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சாவித்திரி கோஸ் (50) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சித், மீராஜ், வெல்டிங் பணியில் ஈடுபட்ட கோடீஸ்வரன், அழகு நம்பி ஆகியோர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தளவாய்புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Assam woman killed in explosion while illegally manufacturing blackpowder fuses near Rajapalayam