இடுக்கு பிள்ளையார் கோவிலில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்: கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல் என்ன தெரியுமா...?
New restrictions imposed at Idukku Pillayar Temple Do you know what important information released by temple administration
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில், அடுத்தடுத்து பக்தர்கள் சிக்கிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் குகைப்பாதைக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், நேற்று அதே இடத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கு பிள்ளையார் கோவில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிறிய குகையைப் போன்ற அமைப்பில் குறுகலான பாதை காணப்படுகிறது. இந்தப் பாதைக்குள் பக்தர்கள் ஒருக்களித்துப் படுத்தவாறு நுழைந்து, கைகளை ஊன்றியபடி மெதுவாக நகர்ந்து மறுபுறம் வெளியே வர வேண்டும்.

குகைப்பாதையைக் கடந்து வெளியே வந்ததும் நந்தி பகவான் சன்னதி அமைந்துள்ளது. பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் தரிசனம் செய்து செல்கின்றனர்.கடந்த 24-ந்தேதி நள்ளிரவில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்பவர் தனது குடும்பத்தினருடன் கிரிவலம் சென்றார்.
அப்போது இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குச் சென்ற அவர், குறுகலான குகைப்பாதைக்குள் படுத்தபடி நுழைந்தார்.ஆனால், குகைப்பாதையின் மறுபுறம் வெளியே வர முடியாமல் அவர் சிக்கிக் கொண்டார். சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதைக் கண்ட சக பக்தர்கள் கடுமையாகப் போராடி அவரை வெளியே மீட்டனர்.
தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மணிக்குமார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இந்த சோக சம்பவம் மறைவதற்குள், நேற்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார்.
அப்போது இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குச் சென்ற அவர், குறுகலான குகைப்பாதை வழியாக நுழைந்து சாமி தரிசனம் செய்ய முயன்றார்.ஆனால், எதிர்பாராதவிதமாக குகைப்பாதையின் குறுகலான பகுதியில் அவரது உடல் சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், அவரை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவரது கையைப் பிடித்து இழுத்து, பெண் பக்தரை குகைப்பாதையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.அடுத்தடுத்து பக்தர்கள் குறுகலான குகைப்பாதையில் சிக்கி வரும் நிலையில், கோவில் நிர்வாகம் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, குகைப்பாதை அருகே எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.அந்தப் பதாகையில், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் குகைப்பாதைக்குள் நுழைய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
New restrictions imposed at Idukku Pillayar Temple Do you know what important information released by temple administration