யூடியூபர் இர்பானுக்கு மீண்டும் சம்மன்...? பாலின அறிவிப்பு விவகாரத்தில் தீவிரமடையும் நடவடிக்கை...!
YouTuber Irfan summoned again Action intensifies gender declaration issue
பிரபல யூடியூபர் இர்பான், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களுக்குச் சென்று உணவுகளைச் சுவைத்து, அவற்றின் தரம் மற்றும் சுவை குறித்து மதிப்பீடு செய்து வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர்.இந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு அவரது மனைவி ஆசிபா கர்ப்பமாக இருந்தபோது, இர்பான் துபாய்க்குச் சென்றார். அங்கு மருத்துவப் பரிசோதனை மூலம் கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை அறிந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்தார். தனக்கு பெண் குழந்தை பிறக்க உள்ளதாக அவர் தெரிவித்ததுடன், அந்த நிகழ்வை தனது யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிவதும், அதை வெளிப்படுத்துவதும் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், இர்பான் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, சுகாதாரத்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இர்பான் சுகாதாரத்துறையிடம் மன்னிப்புக் கடிதம் அளித்ததாகவும், அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது உடனடி சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இர்பான் தொடர்பான விசாரணையும் முடித்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.இதற்கிடையே, கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் இர்பானுக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை விசாரணையை முடித்து வைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனுடன், சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் மனு அளிக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை இர்பான் அறிவித்த விவகாரம் தொடர்பாக 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரம் தொடர்பாக யூடியூபர் இர்பானுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப தமிழக மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.மேலும், அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான சம்மனை இர்பானுக்கு அனுப்ப மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.இதனால், இந்த விவகாரத்தில் இர்பானிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
YouTuber Irfan summoned again Action intensifies gender declaration issue