தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தை பலி...! மோட்டாரைத் தொட்ட 11 மாதக் குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாப பலி...!
baby dies Thoothukudi 11 month old baby electrocuted after touching motorbike and tragically died
தூத்துக்குடியில் பாட்டி வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத ஆண் குழந்தை, எதிர்பாராதவிதமாக இயங்கிக் கொண்டிருந்த நீரேற்றும் மின் மோட்டாரை தொட்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குமால் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பாஸ்டினா. இந்த தம்பதிக்கு 11 மாத ஆண் குழந்தையான மகிழன் இருந்தான்.சம்பவத்தன்று பாஸ்டினா, தனது குழந்தை மகிழனை அழைத்துக்கொண்டு திரேஸ்புரம் தீர்த்தக்கரை பிள்ளையார் கோவில் அருகே உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு வீட்டின் முன்புறத்தில் மகிழன் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அருகில் நீரேற்றுவதற்காக மின் மோட்டார் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக அந்த மின் மோட்டாரை தொட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் குழந்தையை மின்சாரம் தாக்கியதில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மகிழன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் திரேஸ்புரம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
baby dies Thoothukudi 11 month old baby electrocuted after touching motorbike and tragically died