அரியலூர்| அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! சிதறிய கண்ணாடி! படுகாயங்களுடன் 5 பேர் மீட்பு!
Ariyalur government buses collision 5 passengers injured
அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி நேற்று ஒரு அரசு பேருந்து வந்தது. அந்த பேருந்தை ஓட்டுநர் பழனிவேல் ஓட்டினார். மேலும் அந்த பேருந்தில் 23 பயணிகள் பயணம் செய்தனர்.
அதேபோல் திட்டக்குடியில் இருந்து செந்துறை நோக்கி மற்றொரு அரசு நகரப் பேருந்து ஒன்று வந்தது. அதில் 11 பயணிகள் பயணம் செய்த நிலையில் அந்த பேருந்து ஓட்டுனர் பார்த்தசாரதி ஓட்டி வந்தார்.
செந்துறை அடுத்த நல்லநாயகபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு, இந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
மேலும், பேருந்தில் பயணம் செய்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த செந்துறை போலீசார் காயமடைந்த பயணிகளை மீட்டு அவசர ஊர்தி மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில், அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன், சிறு கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி ஆகிய இருவரையும் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், இந்த விபத்து குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து ஏற்பட முக்கிய காரணம் : சாலை வளைவின் ஓரத்தில் கட்டிட வேலைக்காக செங்கற்களை உயரமாக அடுக்கி வைத்திருப்பதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் இப்படியான விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
English Summary
Ariyalur government buses collision 5 passengers injured