வாக்குவாதம் கத்திக்குத்தில் முடிந்தது...! - சொந்த மகனையே சூரி கத்தியால் குத்திய தந்தை கைது...! நடந்தது என்ன...?
argument ended stabbing Father arrested stabbing his own son What happened
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், குடும்பத் தகராறு காரணமாகப் பெற்ற மகனையே தந்தை கத்தியால் குத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள ஆனைமலை கரடு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (49), கட்டிட மேஸ்திரி.

இவரது முதல் மனைவி அலமேலுவுக்கும் இவருக்கும் குணசேகரன் (25) என்ற மகனும், மரகதம் என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையே, வெள்ளைச்சாமி ராணி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டதால், மனக்கசப்பில் முதல் மனைவி தனது பிள்ளைகளுடன் குமாரபாளையத்திற்குக் குடிபெயர்ந்தார்.
திருச்செங்கோட்டில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் பணிபுரிந்து வந்த குணசேகரன், நேற்று தனது பாட்டியைச் சந்திப்பதற்காக ஆனைமலை கரட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தந்தை வெள்ளைச்சாமி, "இங்கு எதற்காக வந்தாய்?" எனக் கேட்டு மகனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தான் பாட்டியைப் பார்க்கவே வந்ததாக குணசேகரன் பதிலளிக்க, இருவருக்கும் இடையே மோதல் முற்றியது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற வெள்ளைச்சாமி, மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் மகன் குணசேகரனின் கழுத்தில் கொடூரமாகக் குத்தினார்.
இரத்த வெள்ளத்தில் சரிந்த மகனை அங்கேயே விட்டுவிட்டு வெள்ளைச்சாமி தப்பியோடினார். அக்கம் பக்கத்தினர் குணசேகரனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு நகரக் காவலர்கள், தலைமறைவாக இருந்த வெள்ளைச்சாமியைக் கைது செய்தனர்.
மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி ரங்கராஜ் உத்தரவிட்டார்.
English Summary
argument ended stabbing Father arrested stabbing his own son What happened