கீழடியில் மீண்டும் ஒரு வரலாற்று அதிசயம்...! - மண்ணுக்குள் இருந்து முழுமையாக மீட்கப்பட்ட சங்க கால வட்டப்பானை...!
Another historical miracle Keezhadi era circular vessel completely recovered from ground
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் பதினொன்றாம் கட்ட அகழாய்வு பணிகள், தமிழர் தொன்மை நாகரிகத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் உலக முன் வெளிச்சமிட்டுக் காட்டி வருகின்றன. கடந்த மார்ச் பதினெட்டாம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வு, கஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான நிலப்பரப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை ஏழு அகழிக்குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், தொன்மை வாய்ந்த செங்கல் கட்டமைப்புகள், சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் சாயக்கிண்ணங்கள், குறுகிய வாயமைப்பைக் கொண்ட சுடுமண் பானைகள் உள்ளிட்ட பல்வேறு அரிய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழாய்வின்போது, வித்தியாசமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட வட்டவடிவ பானையின் சேதமடைந்த மேற்பகுதி கண்டெடுக்கப்பட்டிருந்தது. அந்த கண்டுபிடிப்பு ஆய்வாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பதினொன்றாம் கட்ட அகழாய்வில் சிறிய வடிவமைப்பில் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருந்த அரிய மண்பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன் அருகில் உடைந்த நிலையில் சாயக்கிண்ணங்கள், கருநிற மண்பானை மற்றும் அகன்ற வாய்ப்பகுதியுடன் இருவண்ண அமைப்பில் வடிவமைக்கப்பட்ட சுடுமண் பாத்திரங்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இந்த கண்டுபிடிப்புகள் மூலம், சிந்துவெளி நாகரிகத்திற்கு இணையான மேம்பட்ட கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்ட செங்கல் கட்டுமானங்கள் கீழடியில் பயன்பாட்டில் இருந்துள்ளன என்பது தெளிவாக வெளிப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
English Summary
Another historical miracle Keezhadi era circular vessel completely recovered from ground