சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதர்ப்பு: காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம் - பதற்றம் நிலவுவதால் போலிசார் குவிப்பு!
Ambedkar Statue Vandalized in Chidambaram Police Force Deployed Amid Tension
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கே அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
சம்பவத்தின் பின்னணி: சிதம்பரம் சி. கொத்தங்குடி பகுதியில் பாதுகாப்பு கூண்டுடன் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கூண்டின் இரும்புக் கம்பிகளை உடைத்து எறிந்துவிட்டு, சிலையிலிருந்த கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேதப்படுத்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளனர்.
காவல்துறை விசாரணை: இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) சத்திரிய கவின் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
பொதுமக்கள் வாக்குவாதம்: குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்யும் வரை சேதமடைந்த கூண்டை மீண்டும் பொருத்தக் கூடாது எனக்கூறி அப்பகுதி மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையும் பதற்றமும்: இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர்களின் உறவினர்கள் போலிசாரைத் தடுத்து நிறுத்தியதுடன், தற்கொலை மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவி காவல் கண்காணிப்பாளர் சத்திரிய கவின் தலைமையில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
English Summary
Ambedkar Statue Vandalized in Chidambaram Police Force Deployed Amid Tension