மணிப்பூரில் தமேங்லாங் மாவட்டத்தில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 4 குக்கி சமூகத்தினர் பலி; பதற்றம் அதிகரிப்பு!
4 Kukis Killed in Separate Firing Incidents in Manipur Tamenglong District on Black Day
மணிப்பூர் மாநிலத்தின் தமேங்லாங் மாவட்டத்தில் செப்டம்பர் 13 அன்று நடைபெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பெண் ஒருவர் உட்படக் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல் சம்பவம் (டோலன் கிராமம்): கைமாய் காவல் எல்லைக்குட்பட்ட டோலன் கிராமத்தில் காலை 5:30 மணியளவில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் லிங்ஜங் சிங்சிட் (46) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது கணவர் சேனே சிங்சிட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள அவர்களின் 6 வயது சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இரண்டாவது சம்பவம் (லாங்பி கிராமம்): பிற்பகல் 3 மணியளவில் நுங்பா காவல் எல்லைக்குட்பட்ட லாங்பி கிராமத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் ஜிலி சிங்சன் மற்றும் ரியோல் கங்டே ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் நாகா கிளர்ச்சி அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாக 'வெஸ்டர்ன் வில்லேஜ் வாலண்டியர்' என்ற குக்கி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
காவல்துறை ஆய்வுப் பணிகள்: காவல் நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள லாங்பி கிராமத்திற்குச் செல்லும் சாலைகள் மோசமாக இருந்ததால், காவல்துறையினரால் சம்பவ இடத்தை உடனடியாக அடைய முடியவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
'கருப்பு தினத்தில்' நிகழ்ந்த வன்முறை: 1990-களில் நடைபெற்ற நாகா-குக்கி இன மோதல்களின் போது உயிரிழந்த 1,000-க்கும் மேற்பட்ட குக்கி மக்களின் நினைவாகச் செப்டம்பர் 13-ஆம் தேதியைக் 'கருப்பு தினமாக'க் குக்கி சமூகத்தினர் அனுசரித்து வந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
English Summary
4 Kukis Killed in Separate Firing Incidents in Manipur Tamenglong District on Black Day