பந்த போராட்டம் அறிவித்த அனைத்து கட்சி தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்..அதிமுக வலியுறுத்தல்!
All party leaders who announced the protest should be arrested AIADMKs demand
அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், காவல்துறை தலைவர் ஷாலினி சிங்கிடம் மனு அளித்தார்.
அதில் எதிர்வரும் 09-07-2025-ம் தேதி அன்ற காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளால் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி.கே.பழனிச்சாமி சீரிய தலைமையில் செயல்படும் புதுச்சேரி அதிமுக சார்பில் மக்களின் நலனுக்காக காவல்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டவிரோத இந்த பந்த் போராட்டத்தினால் மக்களின் அன்றாட சகஜ வாழ்க்கை சீர்க்குலைக்கப்படும். வர்த்தக மற்றும் சிறிய, பெரிய, நடுத்தர வியாபாரங்களும், காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனைகள் தடைபடும். வெளிமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு வருகை தரும் பயணிகள் ஆட்டோ, டெம்போ வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்படுவர். பேருந்து ஓட்டம் தடை செய்யப்பட்டால் கிராமப்புற ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவர்.
இந்தியா கூட்டணி சார்பில் பந்த் போராட்டம் பல நாட்களாக அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் BNSS Act.163-ன் படி பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அவசரகால உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. பந்த் போராட்டம் நடத்துவதற்கு மேன்மைமிகு நீதிமன்றத்தின் முன் அனுமதியை அறிவிப்பாளர்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் பெறப்படவில்லை. அரசின் அனுமதி இல்லாத எந்த போராட்டமும் சட்டவிரோத செயல் என உச்சநீதிமன்றம் மற்றும் பல உயர்நீதி மன்றங்கள் தீர்ப்பளித்துள்ள நிலையில் இவை எதையும் புதுச்சேரி அரசு கருத்தில் கொண்டதாக தெரியவில்லை.
மேலும் BNSS Act.170-ன் படி பந்த் போராட்டம் அறிவித்த போராட்டக்காரர்களை (இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை) இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படாததால், பந்த் நடைபெறும் அன்று பேருந்துகளை கூட்டமாக சென்று மறிப்பதும், திறந்திருக்கும் கடைகள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மற்றும் பந்த் போராட்ட ஏற்பாட்டாளர்கள் மீது BNSS Act.324(1)-ன் படி நடவடிக்கை எடுக்குமாறும், மேலும் BNSS Act.148, 149, 150-ன் படி அவர்கள் மீது மாவட்ட வருவாய்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
புதுச்சேரி காவல்துறை சட்டம் ஒழுங்கை காக்கும் பொருட்டு Section 30 of Police Act.1861-ன் படி போராட்டக்காரர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இவ்வகையான பந்த் போராட்டம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் Article 19(1) – Right to move Freely Throught India – ன் படி எதிரானது. எனவே பொதுமக்கனை பாதிக்கின்ற இவ்வகையான சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
பந்த போராட்டம் அறிவித்த அனைத்து கட்சி தலைவர்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த பந்த் போராட்டத்தை முன்னிறுத்தி கட்சி தொண்டர்கள் என்ற பெயரில் பல சமூக குற்றவாளிகள் பொது சொத்துக்களுக்கு பங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். அதிலும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் பந்த் போராட்டம் அறிவித்து நடத்தியபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது போன்று தற்போதும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
English Summary
All party leaders who announced the protest should be arrested AIADMKs demand