விடிய விடியப் பெண் குரலில் பேசிய ஆண்; ஹனிட்ராப் வலையில் சிக்கிய இளைஞர்; தனியாக வரவழைத்து அடித்து துவைத்து செல்போன், பைக்கை பறித்துக் கொண்ட கும்பல்..!
A gang that lured a young man to a secluded spot speaking to him in a female voice throughout the night and robbed him of his cellphone and bike
சென்னை வானகரத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், மூன்று பேர் அறையெடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் செல்போனில் பெண் போல பேசி, ஆசை வார்த்தை மூலம், சிலரிடம் ஹனிட்ராப் வலையில் வீழ்த்தி பணம், பைக், செல்போன் என பறித்துச் செல்லும் நூதனத் திருட்டை அரங்கேற்றியுள்ளனர்.
இவ்வாறு இளைஞர் ஒருவரை விடிய விடிய பெண் போல் பேசி தனிமையில் வரவழைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார். அவரையும் ஆண் தான் குரலை மாற்றி பேசுகிறார் என தெரியாமல் அவர்களிடம் பேசியுள்ளார்.
அதாவது, சென்னை அயப்பாக்கத்தில் வசித்து வரும் அந்த 24 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அவருடைய குரல் இனிமையாக இருக்கவே இரவு, பகல் பாராமல் இவரும் பேசி வந்துள்ளார். அதன்பின்னர், இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி 17-ஆம் தேதி அதிகாலை மதுரவாயல் மேம்பாலம் அருகில் அந்தப் பெண்ணை சந்திக்க குறித்த இளைஞர் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று, இளைஞரைக் கண்டதும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். எதற்கு அவர்கள் அடிக்கிறார்கள் என்று தெரியாமல் விழித்த இளைஞன் தெளிவதற்கு முன்பே அவரது பைக் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது.
இதனையடுத்து அந்த இளைஞர் உடல் முழுவதும் காயங்களுடன் வானகரம் காவல் நிலையம் சென்று, அங்கு போலீசாரிடம் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரை பைபாஸ் சாலைக்கு வரவழைத்த பெண் யார் என அவர் பேசிய செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
விசாரணை முடிவில் குறித்த இளைஞரிடம் பேசியது பெண்ணல்ல ஆண் என அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. ஹோடர்ந்து நடத்திய விசாரணை முடிவில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அப்துல் ரகுமான், சரத்குமார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமலைவாசன் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
இவர்கள் மூன்று பேரும் சென்னை வானகரத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகின்றனர். இதில் முகமது அப்துல் ரகுமான் என்பவர்தான் பெண் போல பேசி இளைஞரை ஹனிட்ராப் வலையில் விழ வைத்தவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து இளைஞரின் செல்போன் மற்றும் பைக்கை போலீசார் மீட்டுள்ளனர். இவர்கள் இதேபோல் வேறு யாரிடமாவது வழிப்பறி செய்திருக்கிறார்களா? என்பது குறித்து கண்டறிய அவர்களது செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் வானகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A gang that lured a young man to a secluded spot speaking to him in a female voice throughout the night and robbed him of his cellphone and bike