கொடுங்கையூர் அருகே கொடூரம்; காதலி கண் முன்னே சரித்திர பதிவேடு ரவுடி படுகொலை; 06 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..!
A famous rowdy was murdered in front of his girlfriend near Kodungaiyur
சென்னை தண்டையார்பேட்டை நேரு நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி பங்காரு என்கிற 21 வயதுடைய அருண். இவர் சி கேட்டகரி ரவுடியும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமாவார். அருண் மீது கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உட்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 06 மாதங்களுக்கு முன்பு ரவுடி அருண் கொடுங்கையூர் எழில் நகர் 09-வது தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தாயுடன் குடியேறியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் ரவுடி அருண் தனது காதலி தர்ஷினி உடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் வீட்டினுள் புகுந்து அருணை காதலி கண்முன்னே வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். கும்பலால் வெட்டப்பட்ட ரவுடி அருண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலி தர்ஷினி கதறி அழுததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அருணை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு கொலையான ரவுடி அருண் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் ரவுடி அருண் கொலைக்கான காரணம் என்ன..? அவரை கொலை செய்தவர்கள் யார்..? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா..? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் கொலை செய்த 06 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A famous rowdy was murdered in front of his girlfriend near Kodungaiyur