சேலத்தில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடிப்பு; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..!
A car suddenly caught fire while traveling on the road in Salem
சேலத்தில் சாலையில் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்து முழுவதும் தீயில் கருகியுள்ளது. அந்த காரில் இருந்த 05 பேர் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். நேற்றிரவு, சேலம் அருகே சித்தனூர் புவனேஸ்வரி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி அனீஷ் (32), நேற்று மாலை, தனது மனைவி கீர்த்தனா, மகள் எஸ்னா, தாய் கமலா மற்றும் சகோதரி மோனிகா ஆகியோரை காரில் அழைத்து கொண்டு, சேலம் 05 ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக் ஷோரூமிற்கு வந்துள்ளார்.
அங்கு பொருட்களை வாங்கி கொண்டு, குறித்த 05 பேரும் காரில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது, குரங்குசாவடி பெட்ரோல் பங்க் அருகே சென்ற கார் இன்ஜினில் இருந்து கரும் புகை வெளியே வந்துள்ளது. உடனடியாக இதை பார்த்த சக்தி அனீஷ், காரை நிறுத்திவிட்டு, மனைவி, தாய், குழந்தை, சகோதரி ஆகியோரை உடனடியாக இறக்கியதோடு, அவரும் காரில் இருந்து இறங்கியுள்ளார்.

அப்போது திடீரென கார் முழுவதும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். ஆனால், இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமாயுள்ளது.
காரில் இருந்து புகை வந்ததும், உடனே அவர்கள் காரிலிருந்து இறங்கியதால் உயிர் தப்பியுள்ளனர். இந்த கார் எரிந்தமை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக கார் இன்ஜினில் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
A car suddenly caught fire while traveling on the road in Salem