8 புகார்கள்... தனிப்படை வேட்டை...! மின்வாரிய ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்...! - 34 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல்...!
8 complaints Special forces hunt dramatic turn case theft electricity board documents 34 hard disks seized
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அண்மையில் மின்வாரிய செயல்பாடுகள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நிலையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நிகழ்ந்த ஹார்டு டிஸ்க்குகள் மாயமான விவகாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், அலுவலகத்தில் பணியாளர்கள் குறைவாக இருந்த நேரத்தை பயன்படுத்தி சுமார் 10 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. அந்த வன் நினைவகங்களில் நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய நிர்வாக ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மின்வாரியம் சார்பில் மொத்தம் எட்டு தனித்தனி புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மின்வாரிய அதிகாரி மலர்விழி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.
இந்த விசாரணையில், மின்வாரிய ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டதையடுத்து அவரை காவலர்கள் கைது செய்தனர்.
மேலும் கைதான கோபிநாத்திடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில், காணாமல் போன ஹார்டு டிஸ்க்குகளை பெங்களூருவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து காவலர்கள் அவரை பெங்களூருவுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தி, மொத்தம் 34 ஹார்டு டிஸ்க்குகளை மீட்டுப் பறிமுதல் செய்தனர்.
மேலும், கோபிநாத்திடம் இருந்து ஹார்டு டிஸ்க்குகளை வாங்கிய நபரையும் சென்னைக்கு அழைத்து வந்து காவலர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
8 complaints Special forces hunt dramatic turn case theft electricity board documents 34 hard disks seized