தூத்துக்குடி துறைமுகத்தில் 4 கோடி மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்.!!
4 crores worthable ciggarets seized in thoothukudi voc port
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல் மூலம் சரக்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதன் படி துபாய் நாட்டின் ஜெபல்அலி துறைமுகத்தில் இருந்தும், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இந்தியாவுக்கு பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க வெளிநாடுகளில் இருந்து வரி ஏய்ப்பு செய்வதற்காக போதை பொருட்கள், செம்மரக்கட்டை கடத்தல் போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துபாய் ஜெபல்அலி துறைமுகத்தில் இருந்து ஒரு சரக்கு கப்பல் கன்டெய்னர்களுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. இந்தக் கப்பலை தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது, அந்த கப்பலில் வந்த ஒரு கன்டெய்னரில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நிறுவனம் போலி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த கன்டெய்னரை தனியாக எடுத்து திறந்து சோதனை நடத்தியதில் பாதி கன்டெய்னர் வரை பேரீச்சம் பழங்கள் இருந்ததும், அடிப்பகுதியில் இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனத்தின் பெயரிலான சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 1,300 பெட்டிகளில் ரூ.4 கோடி மதிப்புள்ள 2 லட்சம் சிகரெட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சிகரெட் பாக்கெட்டுகள், பேரீச்சம் பழம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இந்த சிகரெட்டை கடத்தியவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
4 crores worthable ciggarets seized in thoothukudi voc port