ரூ.1,500 லஞ்சத்துக்கு 2 வருடம் ஜெயிலா...? - லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி ஆக்ஷன்...! - பெண் சப்-இன்ஸ்பெக்டருக்குச் சிறை
2 years jail bribe 1500 Anti Corruption Department action Female sub inspector jailed
15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் பெண் காவல் துணை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கோவை மாவட்டம் உருமண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் இருசக்கர வாகனம், கடந்த 2009-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்தில் சிக்கியது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஆறுமுகம் மீது மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு சென்ற ஆறுமுகத்திடம், அப்போது பணியில் இருந்த பெண் காவல் துணை ஆய்வாளர் ராஜாத்தி ரூ.1,500 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யாமல் காவல் நிலைய பிணையில் விடுவிக்க பணம் வழங்க வேண்டும் என அவர் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.லஞ்சம் வழங்க விரும்பாத ஆறுமுகம், இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் அவரிடம் வழங்கப்பட்டன.அதன்படி, 2009-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆறுமுகம் வழங்கிய லஞ்சப் பணத்தை ராஜாத்தி பெற்றபோது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவலர்கள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் காவல் துணை ஆய்வாளர் ராஜாத்தி மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புவியரசு தீர்ப்பளித்தார்.
English Summary
2 years jail bribe 1500 Anti Corruption Department action Female sub inspector jailed