கரூரில் ஐடி அதிகாரிகளை மிரட்டியதாக திமுகவினர் 18 பேர் கைது..!!
18 DMK members arrested for threatening IT officials in Karur
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மற்றும் அவருடைய உறவினர்கள் வீடு, டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகம், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கரூர் மாவட்டத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்ட போது கரூரை சேர்ந்த திமுகவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு அவர்களை தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த சில வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் நேற்று டிச்சார்ஜ் ஆன நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை குற்ற புலனாய்வு பிரிவு இயக்குனர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
மேலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் நேற்று காலை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் 8 பேரை கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை 3 திமுக கவுன்சிலர்கள் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரைச் சேர்ந்த கணேஷ் முருகன் கிரஸ் மற்றும் நிதி நிறுவன அதிபர் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையின் போது அதிகாரிகளை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தொழிலதிபர் குணசேகரன், அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், தங்கவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது வரை கரூர் மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதாக 18 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு திமுகவை சேர்ந்த சில முக்கிய புள்ளிகளை கைது செய்ய கரூர் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
18 DMK members arrested for threatening IT officials in Karur