ரிஷப் பண்ட்டை முற்றிலும் புறக்கணிக்கக் கூடாது! இஷான் கிஷனை பார்த்து ரிஷப் பண்ட் இந்த விடயத்தை கத்துக்கனும் – இர்பான் பதான்
Rishabh Pant should not be completely overlooked Rishabh Pant needs to learn this from Ishan Kishan Irfan Pathan
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், கே.எல்.ராகுல் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், இஷான் கிஷன் மாற்று விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ரிஷப் பண்டிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறாத இஷான் கிஷன் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ள நிலையில், ரிஷப் பண்ட் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இருந்து பின்தள்ளப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, கே.எல்.ராகுலே இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக தொடர்வார் என்றும், மாற்று விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இருப்பதால் ரிஷப் பண்டின் வாய்ப்புகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், ரிஷப் பண்ட்டை ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் புறக்கணிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஒருநாள் போட்டிகளில் தற்போது கே.எல்.ராகுல் தான் இந்திய அணியின் முதல் தேர்வு. ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் சிறப்பாக விளையாடும் திறன் அவருக்கு உள்ளது. எந்த இடத்தில் களமிறக்கப்பட்டாலும் அணிக்குத் தேவையான பங்களிப்பை வழங்கும் திறன் அவரிடம் இருக்கிறது. அதே நேரத்தில், மாற்று விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் திரும்பியிருப்பது இந்திய அணியின் வலிமையை அதிகரித்துள்ளது,” என்றார்.
மேலும், “விக்கெட் கீப்பர் இடத்திற்கான போட்டியில் ரிஷப் பண்ட்டையும் தொடர்ந்து பரிசீலிக்க வேண்டும். அவர் திறமையான வீரர். தற்போது டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் இழந்திருந்தாலும், இஷான் கிஷனிடம் இருந்து அவர் கம்பேக் கொடுப்பதை கற்றுக்கொள்ள வேண்டும். சில மாதங்களுக்கு முன்புவரை இஷான் கிஷன் இந்திய அணியில் இல்லை. ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி, சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்கண்ட் அணியை சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தார். அதன் பலனாக மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது நிரந்தர வீரராக உருவெடுத்துள்ளார்,” என தெரிவித்தார்.
உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் ரிஷப் பண்ட்டுக்கும் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு உருவாகும் என இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
English Summary
Rishabh Pant should not be completely overlooked Rishabh Pant needs to learn this from Ishan Kishan Irfan Pathan