வைகாசி விசாகத்தில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா? தெரிந்து கொள்ளுங்கள்..!!
Vaikasi visakam special
வைகாசி விசாகம்...!!
வைகாசியானது தமிழ் வருடத்தின் இரண்டாவது மாதமாகும். இளவேனிற் எனப்படும் வசந்த காலத்தில் இம்மாதம் வருவதால் கோவில்களில் பிரம்மோற்சவங்கள், வசந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
அதுபோல வைகாசி மாதம் முருகப்பெருமான் அவதரித்த மாதம். இந்த வைகாசி மாதம் முழுவதுமே முருகப்பெருமானின் சக்தி நிறைந்திருக்கிறது. அவற்றுள் மிகவும் சிறப்பானது வைகாசி விசாகமாகும்.
மார்கழியில் திருவாதிரையும், பங்குனியில் உத்திரமும், தை மாதத்தில் பூசமும், கார்த்திகையில் கிருத்திகையும் விசேஷ தினங்களாகும். அதுபோல், வைகாசியில் விசாக நட்சத்திரம் மிகமிகச் சிறப்பான உன்னதமான நாளாகும்.
இந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதும், முருகன் கோவிலுக்குச் சென்று செவ்வரளி மாலை சாற்றுவதும் மிகுந்த பலனைத் தரும்.
முடிந்தால் எலுமிச்சை சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பிறருக்கு வழங்குங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருள் உங்களுக்கு கிடைக்கும். நினைத்தது நடக்கும்.
வைகாசி விசாகத்தின் சிறப்புகள் :
வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது.
எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் வைகாசி விசாகம் கருதப்படுகிறது. எனவே, வைகாசி விசாகத்தன்று விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதால் நோய் நீங்கி நீடித்த ஆயுள் கிடைக்கும்.
திருமழப்பாடி என்னும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்ததும், வடலூரில் இராமலிங்க அடிகளார் சத்யஞான சபையை நிறுவியதும் இந்நாளில் தான்.
மகாபாரதத்தின் வில் வீரனான அர்ச்சுனன் பாசுபதா ஆயுதத்தை சிவபெருமானிடமிருந்து பெற்ற நாள் வைகாசி விசாகமாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே.
பெரும்பான்மையான கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பிறப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.
வால்மீகி இராமாயணத்தில், விஸ்வாமித்திரர் இராம-லட்சுமணர்களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவார். மேலும், இதனை கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்வார்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த வைகாசி விசாகத்தில் நாமும் முருகப்பெருமானை வழிபட்டு வாழ்வை வசந்தமாக்கி கொள்வோம்.