திருப்பரங்குன்றம் தீர்ப்பு சர்ச்சை...! உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு திருமாவளவன் பதில்...!
Thiruparankundram verdict controversy Thirumavalavan response High Court order
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா நாளில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கடந்த மாதம் 1-ம் தேதி, திருவிழா நாளில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.எனினும், நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு இருந்தபோதும், கார்த்திகை தீபம் ஏற்றப்படாமல் போனது.

இதற்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர், தனி நீதிபதியின் உத்தரவை சவால் செய்து, மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்த இந்த விவகாரத்தில், நேற்று நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது.அந்த தீர்ப்பில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா நாளில் தீபம் ஏற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்து, தனி நீதிபதியின் உத்தரவை மதுரை ஐகோர்ட்டு உறுதிப்படுத்தியது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து எழுந்த அரசியல் விவாதங்கள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அப்போது அவர்,“உறுதியான ஆதாரங்களை விட நம்பிக்கையை முன்னிறுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பாக இது தெரிகிறது.
இத்தீர்ப்பு நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மதசார்பின்மைக்கும் சமூக ஒற்றுமைக்கும் எதிரான தீர்ப்பாக இது அமைந்துள்ளது.
மதவெறி அரசியலை எதிர்க்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்,”என்று கடுமையாக விமர்சித்தார்.
English Summary
Thiruparankundram verdict controversy Thirumavalavan response High Court order