தேர் இழுப்பதற்கு பின்னால் இத்தனை காரணங்கள் இருக்கிறதா? - Seithipunal
Seithipunal


தேர் இழுப்பது என்பது ஒரு சில குறிப்பிட்ட ஊர்களில் மிக விமர்சையாக நடைபெறும். தேர் திருவிழாவில் தேர் என்பது கோவில்களில் உள்ள கடவுள்களை வைத்து ஊர்வலம் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் ஓர் ஊர்தியாகும். பக்தர்கள் திருவிழா நாட்களில் தேரை ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்துச் செல்வார்கள்.

இவ்வாறு தேரினை ஊர்வலமாக எடுத்துச் செல்வது எதற்கு என்றால், கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட இயலாத முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்காக இறைவன் கோவில் விமானம் போன்று உள்ள தேரில் ஒளி ஏற்றி, அவர்களின் இல்லந்தோறும் சென்று, அவர்களுக்கு அருள் வழங்குவதற்காக தேர் திருவிழாக்களைச் சான்றோர்கள் ஏற்படுத்தி கொண்டாடி வந்தனர். 

தேரின் மூன்று பக்கங்களில் இறை உருவங்களும், புராணக்கதையின் தொகுதிகளைக் காட்டும் சிற்பத் தொகுதிகளும், மிருகங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் உருவங்களும், ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் கொடையாளிகளின் உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கும். திருவிழாவின்போது மூன்று பக்கங்களின்மீது எண்ணெய் பூசுவதால் இச்சிற்பங்கள் அழகாக கற்சிற்பங்கள் போன்று கருமை நிறத்தில் காட்சியளிக்கும்.

தேரில் பீடம், மரச்சிற்பங்கள், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கனமான சக்கரங்கள் இருக்கும். அந்த தேரின் பீடம் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். மேலும் தேர் முழுவதும் மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

தேரின் அமைப்பும் உருவங்களும் :

சைவக் கோவில் தேர்களில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும், வைணவக் கோவில் தேர்களில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டு இருக்கும். சில தேர்களில் சைவம், வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றிருக்கும். 

சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் ஆகியவை தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் ஆகும். 

கோவில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பது போலவே தேரின் அமைப்பு இருக்கும். இத்தேர் சதுரம், வட்டம், நீள்வட்டம், நீள் சதுரம், எண்கோணம், அறுகோணம், பதின்கோணம், பன்னிரண்டுகோணம், முட்டை வடிவம் என ஒன்பது வகைகளில் அமைக்கப்படுகிறது.

தேர்களில் அதிட்டானப் பகுதிகளில், இந்து சமய பழமையான கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் தேர்களின் பாதுகாவலர்களாக வைக்கப்பட்டிருக்கும். 

தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரம் கொண்டு அமைந்திருக்கும். சிறிய சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் கொண்டு அமைந்திருக்கும். 

இவ்வாறு அமைக்கப்பட்ட தேரில் கடவுளை அமர்த்தி ஊர்வலமாக இழுத்துச் செல்வதே தேர்த்திருவிழா ஆகும். தேர்த்திருவிழாவின்போது பலதரப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேரை இழுத்துச் செல்வர். இந்து கோவில்களில் ஊர்கூடித் தேர் இழுத்தால்தான் தேர்த்திருவிழாவினைக் கொண்டாட முடியும்.

இவ்வாறு தேர் இழுப்பது மண்ணில் வாழும் மனிதர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temple car 1


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->