நாகதோஷம் நீக்கும் நாக சதுர்த்தி.. எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?
naga chathurthi 2020
கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். பாற்கடலில் இருந்து வெளிவந்த ஆலகால விஷத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது.
இந்நாளில் அஷ்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஐராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தோஷத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர்.
ராகு-கேது தோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிகளுக்கு புது துணி கட்டி பாலால் அபிஷேகம் செய்கின்றனர். சிலர் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்து வந்து அவைகளுக்கு அபிஷேகம் செய்கின்றார்கள்.
நாக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம் என்ன?
ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்துவிட்டனர். அவர்களை உயிர்ப்பித்து தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதரர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மையாக கருதுகிறார்கள்.
அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி. தங்கள் விருப்பம் போல் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்று மண்ணை பிரசாதமாக அணிந்து கொள்வார்கள்.
அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், சங்குபாலன், கார்க்கோடகன், குளிகன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது.
திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்வார்கள்.
நாகபஞ்சமி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும்.
புற்றுக்கு பால் தெளித்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், கரும்பு நைவேத்தியம் செய்து 12 முறை வலம் வந்து வணங்கினால் நன்மை உண்டாகும்.