ஆடித்தபசு - சங்கரன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.!!
devotees croud increase in sangarankovil temple adithabasu
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் எழுந்தருளியுள்ள சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. இந்தக் கோவிலில் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.
இந்த அரிய நிகழ்ச்சியை பக்தர்கள் ஆடித்தபசு திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதன் படி இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தத் திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. மதியம் 12 மணிக்கு மேல் கோமதி அம்பாள் ஆடித்தபசு மண்டபத்திற்கு தங்க சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.15 மணிக்கு மேல் சங்கரநாராயணசாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறும்.
இதையடுத்து மாலை 6 மணிக்கு மேல் சங்கரநாராயணசாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சியும், இரவு 11 மணிக்கு சங்கரலிங்கசாமி யானை வாகனத்தில் புறப்பட்டு சென்று இரவு 11.30 மணிக்கு மேல் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்த ஆடித்தபசு திருவிழாவை காண்பதற்காக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
English Summary
devotees croud increase in sangarankovil temple adithabasu