மகாசிவராத்திரி விரதம் இருப்பதால் உண்டாகும் அற்புத பலன்கள்..!
benefits of shivaratri
சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகாசிவராத்திரிதான். அதனால்தான் மகாசிவராத்திரியன்று நாம் சிவபெருமானை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்று கூறுகின்றனர். மகாசிவராத்திரியன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்? விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம்.
மனிதர்களுக்கு முக்கியமானது இரண்டு விஷயங்கள். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பதுதான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.
மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்று ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விரதத்தை 24 அல்லது 12 வருடங்களாவது மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாழ்வில் எல்லா வளமும் வந்து சேரும்.
வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.
பூஜையின்போது சிவாயநம என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோசக்தியை கொடுக்கும்.
பூஜையின்போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச்சிறந்த பலனை தரும். அன்றைய தினம் இரவில் தூங்கக்கூடாது.
நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடிந்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.