தினம் ஒரு திருத்தலம்.. மலர் அலங்காரத்தில் வேலாயுதசுவாமி.. இடும்ப குமரன்..!!
Arulmigu utthanta velayudha samy temple
அருள்மிகு உத்தண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு உத்தண்ட வேலாயுதசுவாமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
கோயில் எங்கு உள்ளது :
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூர் என்னும் ஊரில் அருள்மிகு உத்தண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
கருவறையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்து, வெற்றி வேலுடன் நின்ற கோலத்தில், மலர் அலங்காரத்தில் வேலாயுதசுவாமி பக்தற்களுக்கு கண்குளிர காட்சியளிக்கிறார்.
சக்திகிரி மற்றும் சிவகிரியை காவடியில் வைத்து சுமந்த கோலத்தில் அருள்பாலிக்கும் இவரை இடும்ப குமரன் என அழைக்கின்றனர்.
இக்கோயிலில் கிழக்கு நோக்கிய நிலையில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் வாத்திய மண்டபம் என நான்கு பகுதிகள் உள்ளது.
உட்பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, முனியப்பன், கன்னிமார், கருப்பராயன், நவகிரகங்கள் மற்றும் பைரவர் ஆகியோர் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
வேறென்ன சிறப்பு:
கோயிலுக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் கிழக்கு நோக்கிய திசையில் கொங்கண சித்தருக்கு கோயில் உள்ளது. இக்கோயிலில் கொங்கண சித்தர் வடக்கு நோக்கி யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார்.
கொங்கண சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட முருகனின் விக்கிரகம் இங்குள்ளது.
இக்கோயிலில் பாத விநாயகர், இடும்பன், ஆஞ்சநேயர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.
ராஜகோபுரத்தின் முன் தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
புகை மூட்டி ஊதியதால் ஊதிமலை என்றும், கொங்கண சித்தர் தவம் செய்து நெருப்பு ஊதி பொன் தயாரித்ததால் பொன் ஊதிமலை என்றும், கொங்கணகிரி என்றும், அனுமன் எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இது என்று கருதப்படுவதால் சஞ்சீவி மலை என்றும் பல பெயர்களில் இம்மலை அழைக்கப்படுவதாக தலபுராணம் கூறுகின்றன.
மலைப்பாதையின் தொடக்கத்தில் சுதை சிற்பங்களை கொண்ட கோபுரத்துடன் அமைந்துள்ள அழகான மயில் மண்டபத்தில், கலைநயத்துடன் கூடிய 4 கல் தூண்கள் வீற்றிருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
திருவிழாக்கள் :
கந்தசஷ்டியும், தைப்பூசமும் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய மாத விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
பிரார்த்தனைகள் :
திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை ஆகியவற்றிற்கு இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
அனைத்து காரியங்களிலும் எந்த தடையும் ஏற்படாமல் வெற்றி கிடைக்க இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்கள் :
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் வேலாயுதசுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தும், நெய்தீபம் ஏற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Arulmigu utthanta velayudha samy temple