1400 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம்...! இயற்கையின் கதைகளைப் பேசும் கோண்ட் ஓவியங்களின் வியக்க வைக்கும் பயணம்...!
tradition spanning 1400 years astonishing journey Gond paintings that tell stories nature
பல நூற்றாண்டுகளாக பழங்குடியின மக்களின் வாழ்வியலையும், இயற்கையுடனான அவர்களின் நெருக்கத்தையும் வண்ணங்களின் வழியே பதிவு செய்து வரும் கோண்ட் கலை, தற்போது புதிய பரிமாணத்துடன் உலக அரங்கில் கவனம் ஈர்த்து வருகிறது. பாரம்பரியக் கோண்ட் கலை வடிவத்துடன் பில், வார்லி உள்ளிட்ட பழங்குடியினக் கலை நுட்பங்களை இணைத்து உருவாக்கப்படும் புதுமையான படைப்புகள், இந்தக் கலைக்கு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றன.
12 கைவினைக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவான கோண்ட்வானா கலைத் திட்டத்தின் முதல் கண்காட்சி, ஐதராபாத்தில் உள்ள ராமா நாயுடு ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சிக்குப் பிறகு கோண்ட் பழங்குடியின கலைஞர்களின் பாரம்பரிய கைவினைப் படைப்புகள் மீது பொதுமக்களின் கவனம் அதிகரித்ததாக, கோண்ட்வானா கலைத் திட்டத்தின் நிறுவனர் சந்தீப் பண்டாரி தெரிவிக்கிறார்.

கோண்ட் கலை என்பது மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் கோண்ட் பழங்குடியின மக்களின் பாரம்பரியக் கலை வடிவமாகும். சுமார் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கலை, அவர்களின் வாழ்க்கை முறை, இயற்கை மீதான நம்பிக்கை, நாட்டுப்புறக் கதைகள் மற்றும் ஆன்மிகச் சிந்தனைகளை ஓவியங்களாகப் பதிவு செய்கிறது.கண்ணைக் கவரும் அடர்த்தியான வண்ணங்களும், நுணுக்கமான கோடுகளும், எண்ணற்ற புள்ளிகளும் கோண்ட் கலையின் முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றன.
முதலில் புள்ளிகள் மற்றும் கோடுகள் மூலம் அடிப்படை வடிவங்கள் உருவாக்கப்பட்டு, அதன் பின்னர் அவற்றுக்குள் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு நுண்ணிய வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.யானை, பசு, சிங்கம், மயில், பட்டாம்பூச்சி உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பல்வேறு பறவைகள் கோண்ட் ஓவியங்களில் முக்கிய இடம் பெறுகின்றன.
அதேபோல் மரங்கள், தெய்வ உருவங்கள் மற்றும் காட்டுயிரினங்களும் இந்தக் கலைப் படைப்புகளில் உயிரோட்டத்துடன் காட்சியளிக்கின்றன.ஒரு காலத்தில் பழங்குடியின மக்களின் வீட்டு மண் சுவர்களை அலங்கரித்த கோண்ட் கலை, காலப்போக்கில் காகிதம், துணி மற்றும் கேன்வாஸ் போன்ற பல்வேறு தளங்களுக்கும் பயணித்துள்ளது.
பாரம்பரியத்தின் வேர்களைத் தக்கவைத்துக்கொண்டே நவீன கலை நுட்பங்களையும் உள்வாங்கி வரும் இந்தக் கலை, இந்திய எல்லைகளைக் கடந்து பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அறிமுகமாகியுள்ளது.கோண்ட் கலையில் மரங்கள் வெறும் இயற்கைக் காட்சிகளாக மட்டும் வரையப்படுவதில்லை. ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு கதை, நம்பிக்கை அல்லது பண்பாட்டு அடையாளம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
கஞ்சா மற்றும் மஹுவா மரங்கள் தொடர்பான ஒரு பழங்குடியின நாட்டுப்புறக் கதை கோண்ட் ஓவியங்களில் இடம்பெறுகிறது. உயர்சாதியைச் சேர்ந்த ஒரு பிராமணருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலை சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் இருவரும் காட்டுக்குள் சென்று கஞ்சா மற்றும் மஹுவா மரங்களாக மாறியதாக அந்தக் கதை தெரிவிக்கிறது. இந்த இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்தக் கூடாது என்ற நம்பிக்கையும் சில பழங்குடியின மக்களிடையே காணப்படுகிறது.சஜா மரம் கோண்ட் பழங்குடியின மக்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அவர்களின் ஆன்மிக நம்பிக்கைகளில் இம்மரத்துக்கு முக்கிய இடம் உண்டு.
பக்ரி மரத்தில் புதிய இலைகள் துளிர்க்கும் காலத்தில், அந்த இலைகளை உணவாகத் தயாரித்து சாப்பிட்டால் உடல்நலக் குறைபாடுகள் நீங்கும் என்ற பாரம்பரிய நம்பிக்கை கோண்ட் மக்களிடையே காணப்படுகிறது. இந்த மரத்தைப் புனிதமாகக் கருதும் அவர்கள், அதன் அடியில் வழிபாட்டுக்கான மேடைகளையும் அமைக்கின்றனர்.
அரசமரத்தில் தெய்வீக சக்தி இருப்பதாக கோண்ட் மக்கள் நம்புகின்றனர். அவர்களின் பண்பாட்டு மற்றும் ஆன்மிக வாழ்வில் அரசமரம் தனிச்சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், புதிய தலைமுறையினரையும் சந்தையையும் சென்றடையும் வகையில் கோண்ட் கலைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய ஆடைத் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கோண்ட் கலைஞர்களுக்காக பல பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாகாலாந்து, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் புதிய கலை நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் இணையவழிக் கண்காட்சிகள் மூலம் கோண்ட் கலைப் படைப்புகள் இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் பாரம்பரியக் கைவினைக் கலைஞர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
மும்பையில் உள்ள ஜெஹாங்கீர் கலைக்கூடம், டெல்லி, பீகார் உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கோண்ட்வானா கலைத் திட்டத்தின் சார்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.கோண்ட் கலையின் சிறப்பு ஓவியங்களில் மட்டும் முடிவதில்லை. பழங்காலத்தில் கோண்ட் கலைஞர்கள் ‘பானா’ என்ற இசைக்கருவியை இசைத்தபடி கோண்ட் மன்னர்கள் மற்றும் அவர்களது வரலாற்றைப் பாடல்கள் மூலம் மக்களிடம் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு ஓவியம், இசை, இயற்கை, நாட்டுப்புறக் கதைகள், ஆன்மிக நம்பிக்கைகள் என கோண்ட் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் தன்னுள் பிரதிபலிக்கும் இந்தக் கலை, இன்று நவீன கலை உலகிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.மண் சுவர்களில் பிறந்து, கேன்வாஸ்களில் பயணித்து, உலக அரங்கில் தடம் பதித்து வரும் கோண்ட் கலை, பழங்குடியின பாரம்பரியம் காலத்தைக் கடந்து புதிய வடிவங்களில் உயிர்ப்புடன் தொடர முடியும் என்பதற்கு அழகிய சான்றாக விளங்குகிறது.
English Summary
tradition spanning 1400 years astonishing journey Gond paintings that tell stories nature