லட்சக்கணக்கான கோடி கடன் எங்கே போனது...? - திமுக அரசை வெள்ளை அறிக்கையால் கணக்கு காட்டுமாறு வானதி சீனிவாசன் கடும் சவால்...!
Where did lakhs crore debt go Vanathi Srinivasan strongly challenges DMK government account through white paper
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அவர்கள், தி.மு.க. அரசு கடந்த ஆண்டுகளில் பெற்ற கடன்கள் மற்றும் அவற்றின் செலவின விவரங்களை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர் இன்று (பிப்.17) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது,"அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் மத்திய அரசு மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களால் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் உயரும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் அரசே இடைக்கால பட்ஜெட்டில் ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.48,696.32 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது.மேலும், 2026–27ஆம் ஆண்டில் மட்டும் ரூ.1,78,308 கோடி அளவிற்கு புதிய கடன் பெற திட்டமிட்டுள்ளதாகவும், அதன் விளைவாக 2027 மார்ச் 31ஆம் தேதிக்குள் தமிழகத்தின் மொத்த கடன் சுமை ரூ.10,71,770 கோடியாக உயரக்கூடும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டிலேயே ரூ.1.84 லட்சம் கோடி அளவிற்கு கடன் வாங்கியிருப்பதும் கவலைக்கிடம் என அவர் சுட்டிக்காட்டினார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக விளம்பரங்களால் மட்டும் பிரசாரம் செய்யப்படும் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், நிதி மேலாண்மையில் தெளிவின்மை வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் விமர்சித்தார்.
இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் வாக்குறுதிகள் மற்றும் வார்த்தை விளையாட்டுகள் மட்டுமே உள்ளன; மக்கள் நலனுக்கான தெளிவான திட்டங்கள் இல்லை என்றார்.
எனவே, இவ்வளவு பெருமளவில் கடன் எடுத்து அந்தத் தொகை எங்கு, எதற்காக, எப்படி செலவிடப்பட்டது என்பதை மக்களுக்கு வெளிப்படையாக விளக்கும் வகையில் அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Where did lakhs crore debt go Vanathi Srinivasan strongly challenges DMK government account through white paper