வெளியாகப்போகும் முக்கிய உத்தரவு என்ன...? 2-வது நாளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!
What important order that issued Chief Minister Vijay holds intensive consultation IAS and IPS officers 2nd day
தமிழக நிர்வாகத்தின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் மக்கள் நலப் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யும் முக்கிய மாநாடு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு அதிகாரிகள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.தமிழகத்தில் ஆண்டுதோறும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவலர் துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலவரம், நிர்வாக செயல்திறன், மக்கள் நலத்திட்டங்களின் அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆழமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவலர் துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
மாநாட்டின் முதல் நாளில் இரண்டு அமர்வுகள் நடைபெற்றன. முதல் அமர்வில் மாவட்ட கலெக்டர்களும் காவலர் துறை அதிகாரிகளும் இணைந்து பங்கேற்று முக்கிய விவாதங்களில் ஈடுபட்டனர்.
இரண்டாவது அமர்வில் அரசுத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டு பல்வேறு நிர்வாக அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்-அமைச்சர் விஜய், “வெளிப்படைத்தன்மை, நேர்மை, லஞ்சமற்ற நிர்வாகம் மற்றும் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை மக்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று வலியுறுத்தினார்.
மேலும், ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து சேவை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அதிகாரிகள் சட்டத்தின் அடிப்படையில் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம். பாரபட்சமின்றி உடனடி நடவடிக்கை எடுத்து உரிய தண்டனையை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.அதே நேரத்தில், நிரபராதிகள் எந்த சூழலிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக மிகுந்த கவனம் செலுத்திய முதல்-அமைச்சர் விஜய், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது என்று கடுமையாக எச்சரித்தார்.
பெண்களின் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வது நிர்வாகத்தின் முதன்மை பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.இதற்காக மாவட்ட கலெக்டர்களும் காவல்துறை கண்காணிப்பாளர்களும் தனிப்பட்ட முறையில் கூர்மையான கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், மாநாட்டின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள், வனத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டின் நிறைவில் முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் உரையாற்ற உள்ளார். அப்போது திறமையாக செயல்பட்ட கலெக்டர்கள் மற்றும் காவலர் துறை அதிகாரிகளை பாராட்டி சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
What important order that issued Chief Minister Vijay holds intensive consultation IAS and IPS officers 2nd day