தவெக அரசுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை... 5 ஆண்டுகளும் ஆட்சி தொடரும்...! - மதுரையில் திருமாவளவன் திட்டவட்டம்...!
There no threat tvk government government continue 5 years Thirumavalavan plan Madurai
த.வெ.க. அரசுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை; முழு 5 ஆண்டுகளும் இடையூறு இன்றித் தொடர்ந்து ஆட்சி நடைபெறும் என திருமாவளவன் உறுதியாக தெரிவித்துள்ளார்.திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது த.வெ.க. ஆட்சியின் நிலைத்தன்மை, கூட்டணி உறவு மற்றும் அ.தி.மு.க.வில் நிலவும் அரசியல் சூழல் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
த.வெ.க. ஆட்சி குறித்து அவர் பேசுகையில், “எங்களைப் பொறுத்தவரை த.வெ.க. ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்த 5 ஆண்டுகளும் எந்தவித தடையும் இல்லாமல் இந்த அரசு உறுதியாக நீடிக்கும்.த.வெ.க. ஆட்சி தொடர்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவுடன் துணைநிற்கும்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நாங்கள் உறுதியாக காப்பாற்றுவோம். த.வெ.க. அரசுக்கு வழங்கிய ஆதரவு எந்த சூழலிலும் சிதையாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மேலும், நாளை நடைபெற உள்ள த.வெ.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும், விசிக சார்பில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் தொடர்ந்து நடைபெற்று வரும் பதவி விலகல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து நிகழும் பதவி விலகல்கள், அக்கட்சிக்குள் நிலவும் உட்கட்சி முரண்பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.இது தற்போது அ.தி.மு.க.வில் தீவிரமான அரசியல் சிக்கலை உருவாக்கியுள்ளது.
அந்தக் கட்சிக்குள் என்ன பிரச்சினை நிலவுகிறது என்பதை பதவி விலகிச் செல்லும் நபர்களிடமே கேட்க வேண்டும். அவர்கள்தான் உண்மையான காரணங்களை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
There no threat tvk government government continue 5 years Thirumavalavan plan Madurai