“வேகமாக முடிக்க வேண்டும்” - அடையாறு தூர்வாரும் பணிகளில் அதிகாரிகளுக்கு கடும் உத்தரவிட்ட ஸ்டாலின்...!
We must complete it quickly Stalin gives strict orders to officials on Adyar dredging work
வடகிழக்கு பருவமழை, சில நாட்கள் தாமதமாக துவங்கியிருந்தாலும், தற்போது அதிரடியாக தனது தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 16ஆம் தேதி தமிழகத்தில் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியதிலிருந்து, பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனை முன்னிட்டு, வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தீவிர மழை எச்சரிக்கை விடுத்திருந்ததால், தமிழக அரசு முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் மற்றும் அகலப்படுத்தும் பணிகளை இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அப்பணிகள் வேகமாக முடிக்கப்பட வேண்டும் என்றும், மழை காலத்தில் நீர் ஓட்டம் தடையில்லாமல் கடலுக்கு செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் உறுதியாக செய்யப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவு வழங்கினார்.
இந்த ஆய்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் மரு. நா. எழிலன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருண்மொழி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
English Summary
We must complete it quickly Stalin gives strict orders to officials on Adyar dredging work