பளீச்..! விஜய் அரசியலுக்கு வந்தது துணை முதல்வராக அல்ல... முதல்வர் நாற்காலிதான் இலக்கு...! - செங்கோட்டையன்
Vijay not entered politics become Deputy Chief Minister Chief Minister chair his sole objective Sengottaiyan
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்.
அப்போது, த.வெ.க தலைவர் விஜய் டெல்லி சி.பி.ஐ விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே விஜய் தனது கலைத்துறையைத் துறந்து அரசியலுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது விஜய் செல்லும் இடமெல்லாம் கூடும் மக்கள் கூட்டம், தமிழகத்தில் ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதையே காட்டுவதாகவும், அந்த மாற்றத்தைக் கொண்டு வரும் திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும், என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைந்தால் அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என வெளியாகும் தகவல்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் தான் அரசியலுக்கு வந்துள்ளார் என்றும், துணை முதலமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் த.வெ.க-வில் உள்ளதாகவும், தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு மக்கள் காட்டும் ஆர்வம் இதற்கு முன் எப்போதும் பார்த்திராத ஒன்று என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
English Summary
Vijay not entered politics become Deputy Chief Minister Chief Minister chair his sole objective Sengottaiyan