தேர்தலில் மாஸ்டர் பிளானோடு களமிறங்கும் விஜய்! 5 தொகுதிகளுக்கு ஸ்கெட்ச்! எல்லாமே ‛வி' சென்டிமென்ட்!கைகொடுக்குமா ‛வி' சென்டிமென்ட்!
Vijay enters the election with a master plan Sketch for 5 constituencies Everything is V sentiment Will the V sentiment be accepted
நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் நேரடியாகப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தொடங்கியுள்ள விஜய், தனது அரசியல் பயணத்தில் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்க உள்ளதால், அவர் எந்தத் தொகுதியைத் தேர்வு செய்வார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், ‘வி’ (V) என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்ற ஜோதிட ஆலோசனையை கருத்தில் கொண்டு, அதே அடிப்படையில் தொகுதி தேர்வில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இரண்டு தொகுதிகள் மற்றும் சென்னைக்கு வெளியே மூன்று தொகுதிகளின் களநிலவரம் குறித்து அவர் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்.
சென்னையில், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகள் மீது விஜய் அதிக கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளும் ‘வி’ என்ற எழுத்தில் தொடங்குவதோடு மட்டுமல்லாமல், விஜய்க்கு தனிப்பட்ட முறையிலும் நெருக்கமான தொடர்பு கொண்ட பகுதிகளாகவும் உள்ளன. வேளச்சேரி, விஜயின் பனையூர் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள வேகமாக வளர்ந்து வரும் பகுதி. அதேபோல், விருகம்பாக்கம் அவரது பெற்றோர் வசித்து வரும் பகுதியாகும். தனிப்பட்ட பிணைப்புகளுடன் அரசியல் ரீதியாகவும் இந்த இரண்டு தொகுதிகள் தமக்கு சாதகமாக இருக்கும் என விஜய் நம்புவதாக கூறப்படுகிறது.
சென்னைக்கு வெளியே, விக்கிரவாண்டி, வேதாரண்யம், வேடசந்தூர் ஆகிய மூன்று தொகுதிகளையும் விஜய் ஆராய்ந்து வருகிறார். இதில் விக்கிரவாண்டி தொகுதி தவெகவின் அரசியல் பயணத்தில் முக்கிய இடத்தைப் பெற்றதாக பார்க்கப்படுகிறது. தவெகவின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்ற இடம் இதுவாகும். அங்கு தான் விஜய் கட்சியின் கொள்கைகளை அறிவித்து, பாஜகவை கொள்கை எதிரியாகவும், திமுகவை அரசியல் எதிரியாகவும் அறிவித்தார். அந்த மாநாட்டில் பெருமளவில் தொண்டர்கள் திரண்டது, விக்கிரவாண்டியை ஒரு வலுவான அரசியல் அடையாளமாக மாற்றியுள்ளது.
வேதாரண்யம் தொகுதி கடற்கரைப் பகுதியாக இருப்பதுடன், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதி. அகமுடையார், வன்னியர் சமுதாயத்தினரும் கணிசமான அளவில் உள்ளனர். தற்போது இந்தத் தொகுதியில் அரசியல் போட்டி ஏற்கனவே சூடுபிடித்துள்ள நிலையில், விஜய் இங்கு களமிறங்கினால் அது முக்கியமான திருப்பமாக பார்க்கப்படும்.
வேடசந்தூர் தொகுதியில் ஒக்கலிக கவுடர் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பிள்ளைமார், கவுண்டர், நாயுடு சமுதாயத்தினரும் உள்ளனர். இதுதவிர ஆசாரி, நாடார் மற்றும் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் பல்துறை சமூக அமைப்பைக் கொண்ட தொகுதியாக இது விளங்குகிறது.
‘வி’ சென்டிமென்ட் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த ஐந்து தொகுதிகள் விஜயின் கவனத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இறுதி முடிவை விஜயே எடுப்பார் என்றும், அந்த அறிவிப்பு வெளியாகும் போது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலை ஏற்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
English Summary
Vijay enters the election with a master plan Sketch for 5 constituencies Everything is V sentiment Will the V sentiment be accepted