பாஜக வேட்பாளர் வெற்றி உறுதியானது! துணை குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணித்த பிஜு ஜனதா தளம்!
vice president election CP Radhakrishnan BJD Biju Janata Dal congress
இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21 அன்று திடீரென ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக தான் பதவியை விலகுவதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து புதிய துணை குடியரசு தலைவர் தேர்வு செய்வதற்கான பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த மாதம் இருவரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதன் பின்னர் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களிடம் ஆதரவை நாடி பிரசாரம் நடத்தினர். தற்போது பாராளுமன்றத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு 422 எம்.பிக்கள் பலம் உள்ளதால், சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதி என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு தேவையான எம்.பி.க்கள் ஆதரவு இல்லாததால் வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது.
இந்நிலையில், நாளைய துணை குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது.
அந்தக் கட்சிக்கு மாநிலங்களவையில் 7 எம்.பிக்கள் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையில் தாங்கள் சமதூரத்தில் இருப்பதாகவும், ஒடிசா மாநில வளர்ச்சியே தங்களது முன்னுரிமை எனவும் அந்தக் கட்சியின் எம்.பி. சஸ்மித் பத்ரா தெரிவித்துள்ளார்.
இதனால் நாளைய துணை குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.
English Summary
vice president election CP Radhakrishnan BJD Biju Janata Dal congress