வங்கதேசத்தை வீழ்த்தி உலகக்கோப்பை அரையிறுதியில் நுழைந்த இளம் இந்திய சிங்கங்கள்.!
U19 World cup INDvBAN
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதில் நேற்று, இந்தியா - வங்கதேச அணிகள் மோதின.
அரையிறுதிக்கு செல்வதற்கான இந்த முக்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே சரியில்லாமல் போனது.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத வங்கதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 37.1 ஓவர்களில் வங்கதேச அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் அதிகபட்சமாக மெஹரோப் 30 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவிக்குமார் 3 விக்கெட்களையும், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
தொடக்க ஆட்டக்காரர் ரகுவன்ஷி 44 ரன்னும், ஷேக் ரஷீத் 26 ரென்னும் எடுத்தனர். கேப்டன் யாஷ் தல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று 20 ரன் எடுத்தார்.