'ஒரே கூட்டில் வாழும் இரு பறவைகள்'...! - பாஜக மற்றும் காங்கிரஸை விளாசிய சி.வி.சண்முகம்....!
Two birds living in the same nest CV Shanmugam slams BJP and Congress
தமிழக சட்டசபையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. இரு தரப்பினரும் நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்பது குறித்து மாறி மாறி கருத்துகளை முன்வைத்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் குறுக்கிட்டு இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.

விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட், கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நீட் தேர்வு தேவையில்லை என்று கருதிய மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன், “இத்தனை ஆண்டுகளாக நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை.
தற்போது அதை ஒப்புக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய தாரகை கத்பட், பொதுமக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்ததாகவும், அந்தத் திட்டங்களில் தேவைக்கேற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது போல் நீட் தேர்விலும் சில திருத்தங்களைச் செய்து, தேவையான மாநிலங்களுக்கு விலக்கு வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம், நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டாலும், இரு கட்சிகளின் அணுகுமுறையிலும் பெரிய வேறுபாடு இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்.“நீட் தேர்வை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று காங்கிரஸ் தரப்பும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று பாஜக தரப்பும் கூறுகிறது.
இரு கட்சிகளும் வெளிப்படையாக வேறுபட்டதாக தெரிந்தாலும், அவர்களின் உடலில் ஓடுவது ஒரே ஜீன்தான்” என்று அவர் சாடினார்.மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை அரசியல் கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தில் உரிய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வதைவிட, நீட் தேர்வை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி இரு கட்சிகளும் அரசியல் ஆதாயம் தேடுவதாக சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.
English Summary
Two birds living in the same nest CV Shanmugam slams BJP and Congress