டோல்கேட் கட்டண உயர்வு விவகாரம்: 'மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'...! - மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
Tollgate fee hike issue Central government should withdraw it immediately Manickam Thakur insists
தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் சுங்கக் கட்டணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"நெடுஞ்சாலைகளை உருவாக்கிய பெருமையை தானே முழுமையாக தட்டிச் செல்வதுபோல், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து தற்பெருமை பேசி வருகிறார்.

தன்னைத் தானே ‘நெடுஞ்சாலைத் துறையின் நாயகன்’ என்று பாராட்டிக்கொண்டு மகிழும் அவர், சுங்கக் கட்டண உயர்வால் மக்கள் சந்தித்து வரும் சிரமங்களை மட்டும் கண்டுகொள்வதில்லை.மோடி தலைமையிலான ஆட்சியில், நெடுஞ்சாலைகள் மக்களின் பயண வசதிக்கான கட்டமைப்பாக மட்டுமின்றி, சுங்கக் கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களின் பணத்தை வசூலிக்கும் வழியாகவும் மாற்றப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும், மொத்த விற்பனை விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளாலும், கடந்த 4 மாதங்களில் 3-வது முறையாக சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் மீண்டும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, நடுத்தரக் குடும்பங்களுக்கும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், மக்களின் இந்தத் துயரங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுவிட்டதால் நாடு வளர்ச்சி அடைந்துவிட்டதாக மத்திய அரசு தொடர்ந்து பெருமை பேசுகிறது.
தமிழகத்தில் உள்ள 80 சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.4,200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகை வசூலிக்கப்பட்டும், லாரிகளுக்கான சுங்கக் கட்டணத்தை மேலும் ரூ.30 வரை உயர்த்தி தமிழக மக்களுக்கு மீண்டும் கூடுதல் சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் வருமானத்தையும் நேரடியாகப் பாதிக்கும் இந்த சுங்கக் கட்டண உயர்வு கடும் கண்டனத்திற்குரியது. மக்கள் மீது தொடர்ந்து சுமைகளை ஏற்றிவரும் மத்திய அரசு, சுங்கக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலிக்கும் மத்திய அரசு, அதற்கேற்ப தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வழங்குவதிலும், மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்குவதிலும் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை.
அதேபோல், ரெயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு ‘வந்தே பாரத்’ படுக்கை வசதி ரெயில்கள் ஒதுக்கப்படாமலும் புறக்கணிப்பு தொடர்கிறது.
தமிழகத்தை வருவாய் ஈட்டித் தரும் இடமாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நிதி மற்றும் திட்டங்களை வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்.இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் வலுவான குரல் எழுப்புவார்கள்" என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
English Summary
Tollgate fee hike issue Central government should withdraw it immediately Manickam Thakur insists