மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் அகந்தையை அடக்க இதுவே சரியான வழி...! - முதலமைச்சருக்கு வாழ்த்து சொன்ன வேல்முருகன்...!
This right way curb Karnataka arrogance Mekedatu issue Velmurugan congratulates Chief Minister
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்படுவதாவது,"காவேரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதலமைச்சருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே நேரத்தில், தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளை பாதுகாக்க உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காவேரி மேலாண்மை வாரியத்தின் சட்ட அதிகாரங்களையும் முழுமையாக பயன்படுத்தி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.கர்நாடக அரசுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட தேவையில்லை.
தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சினையில் சமரசத்திற்கு இடமில்லை.இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்வைத்த தனித்தீர்மானம், தமிழ்நாட்டின் நீர்வள உரிமையை உறுதியாக வெளிப்படுத்தும் முக்கிய அரசியல் நிலைப்பாடாக அமைந்துள்ளது.
காவிரி நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றமும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி காவிரி விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புகளை மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் கருத்துகளை பெறாமலும், மத்திய அரசின் ஒப்புதல் இன்றியும் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக சட்டப்பேரவை தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
மேலும், மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது.காவிரி பிரச்சினை என்பது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுகளோடு இணைந்த மிக முக்கியமான உரிமை பிரச்சினையாகும்.
எனவே, மேகதாது அல்லது காவிரி படுகையின் வேறு எந்த பகுதிகளிலும் புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை, பிற படுகை மாநிலங்களின் இசைவு மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி கர்நாடக அரசு செயல்படுத்தக்கூடாது.அத்துடன், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள அமைப்பையும் சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் நீர்வள உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சட்டப்பேரவை ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை முன்மொழிந்த தமிழக முதலமைச்சருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேசமயம், காவேரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியான வழிமுறைகள் மூலமே தமிழ்நாட்டின் உரிமைகளை முழுமையாக நிலைநாட்ட வேண்டும்.கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
This right way curb Karnataka arrogance Mekedatu issue Velmurugan congratulates Chief Minister