'தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை'...! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலியல் கொடூரங்கள்...! - டிடிவி தினகரன் கண்டனம்!
There no safety women Tamil Nadu harassment increasing day by day TTV Dhinakaran condemns
தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சட்டம்-ஒழுங்கு நிலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு உடனடி மற்றும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த கால அவகாசம் கோருவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால், சமூக அமைதியையும் மக்களின் பாதுகாப்பையும் பாதிக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதில் போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதை ஆட்சியாளர்கள் எப்போது உணரப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர், சங்கரன்கோவில் அருகே 10-ஆம் வகுப்பு மாணவி, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது சிறுமி, கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை என கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த நிலையில், அதன் உடல் முட்புதரில் மீட்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மனதை உலுக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிஞ்சுக் குழந்தைகள் முதல் முதிய பெண்கள் வரை சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படும் வகையில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற மனிதநேயமற்ற செயல்களை இன்னும் எத்தனை காலம் சகித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அரசு தொடர்ந்து அறிவித்து வந்தாலும், நடைமுறையில் குற்றச்சம்பவங்கள் குறையாதது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க உறுதியான செயல்திட்டங்களும், கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளும் அவசியம் என வலியுறுத்தியுள்ள டிடிவி தினகரன், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த பொதுமக்களின் அச்சத்தை போக்க அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தனது கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
There no safety women Tamil Nadu harassment increasing day by day TTV Dhinakaran condemns