'தென்காசியில் சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..! - Seithipunal
Seithipunal


''தென்காசி நெட்டூர் கிராமத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும், உள்ளூரில் இவர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் மீதும் எஸ்.சி. / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டித்திட வேண்டும்'' என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

''தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், மே 29-ம் தேதி திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமகனின் உறவினர்கள் சிலர் மே 28 அன்று இரவு 9 மணிக்கு மேல் மணமக்களை வாழ்த்தி ப்ளெக்ஸ் பேனர் அமைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் ப்ளெக்ஸ் அமைத்துக் கொண்டிருந்த இளைஞர்களோடு “இங்கே ப்ளெக்ஸ் போர்டு வைக்கக் கூடாது” என்று தகராறு செய்திருக்கிறார். இது குறித்து ஆலங்குளம் காவல் துறைக்கும் தெரிந்திருக்கிறது.

இதே கிராமத்தில், கடந்த 5 மாதங்களில் பட்டியலின மக்கள் மீது சுமார் 8 வன்கொடுமைகள் நடந்துள்ளதாக அறிய முடிகிறது. இவை அனைத்தும் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தாலும், இதில் ஒரு பிரச்சினையில் கூட காவல் துறை வழக்கு பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து முறையில் சமாதானம் பேசி அனுப்பிவைத்ததாகவும் மாதா கோவில் தெருவைச் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள்.

மே 28-ம் தேதி நடைபெற்ற வன்கொடுமையிலும் காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளாமல் வழக்கமான முறையில் சமாதானம் பேசி அப்போதைக்கு பிரச்சினையை முடித்துள்ளது.

இந்நிலையில், மே 29-ஆம் தேதி மாலையில் திருமண வீட்டில் உறவினர்களும் நண்பர்களும் மணவிழா விருந்தில் பங்கேற்பதற்காக கூடியிருந்துள்ளனர். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் 9 பேர் அடையாளம் தெரியாத படி துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு கையில் பயங்கர ஆயுதங்களுடன் வெறிக்கூச்சல் போட்டவாறே வந்துள்ளனர்.

அவ்வாறு வந்தவர்கள் கூடியிருந்தவர்கள் மீது கண்மண் தெரியாமல் வெட்டரிவாளை வீசி கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ரமேஷ் (49) த/பெ ஞானமுத்து, சந்தோஷ் குமார் (21) த/பெ கணேசன், அருள்மாறன் (23) த/பெ ரமேஷ், ராயப்பன் (18) த/பெ காபிரியேல், ராம்குமார் (20) த/பெ சேகர் மற்றும் திருமண வீட்டில் மேளம் அடிப்பதற்காக வந்திருந்த மேளக் கலைஞர் மாடசாமி (19) த/பெ பரமசிவம் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் முதலில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், அதன் பிறகு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமண வீட்டில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாத சாதிய மனநிலை இந்தக் கொடூர சம்பவத்துகுப் பின்புலமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற சாதிய ஆதிக்க வன்கொடுமை தாக்குதல்களும், படுகொலைகளும், பட்டியலின மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சாதிய கண்ணோட்டத்தோடு நடைபெறுகிற இந்தத் தாக்குதல்கள் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், வழக்குகளை பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து ரீதியில் சமாதானமாகப் பேசி காவல் நிலையத்திலேயே முடித்து வைப்பதால்தான் இதுபோன்ற வன்கொடுமைகள் தொடர்ந்து பகிரங்கமாக நடைபெறுகின்றன.

எனவே, உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், வழக்குகளை பதிவு செய்யாமலும் மிக அலட்சியமாக நடந்து கொண்ட காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும், உள்ளூரில் இவர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் மீதும் எஸ்.சி. / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டித்திட வேண்டுமெனவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான தீருதவியை வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்கும் சட்டரீதியான பாதுகாப்புக்கும் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென தமிழக அரசை சிபிஎம் வலியுறுத்துகிறது.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அதேபோல், தென்காசி மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி உள்ளிட்டோர் நெட்டூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். நீதி கிடைக்கும் போராட்டத்தில் தாங்கள் துணை நிற்போம் என்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதியளித்துள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Marxist Communist Party demands that strict action be taken against all perpetrators involved in the caste based hate attack in Tenkasi


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->