பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரியை முழுமையாக ரத்து; மத்திய அரசு உத்தரவு..!
Central Government Orders Complete Waiver of Customs Duty on Cotton Imports
முன்னதாக பருத்தி மீது 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய ஜவுளித் துறைக்கான பருத்தி இருப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் சுங்க வரி மற்றும் 'வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம்' (Agriculture Infrastructure and Development Cess) ஆகியவற்றில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என்றும், இந்த வரி ரத்து நடவடிக்கையானது, வரும் ஜூன் 01 முதல் அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்திய ஜவுளித் துறைக்கான பருத்தி இருப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தற்காலிக வரி விலக்கு ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் பெருமளவில் மூலதன செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் லாபம் கிடைக்கும் என்றும், உள்நாட்டு விவசாயிகளின் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் படி, இந்த நடவடிக்கை உள்நாட்டு ஜவுளித் துறையில் ஈடுபட்டிருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும், சந்தையில் பருத்தியின் கையிருப்பை உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Central Government Orders Complete Waiver of Customs Duty on Cotton Imports