தமிழக அரசியலில் பரபரப்பு! சிக்கலில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி...! - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி பிடிவாரண்ட்
Tamil Nadu politics in turmoil Former DMK minister Ponmudi in trouble Court issues arrest warrant
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

அவரது பேச்சு மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டும் விதத்திலும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனிப்புகார் மனுவை தாக்கல் செய்தார். அதில், பொன்முடியின் பேச்சு மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர், மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் மற்றும் வழக்கையே ரத்து செய்யக் கோரி பொன்முடி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மறுத்ததுடன், நிலுவையில் உள்ள விசாரணையை ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.இந்த நிலையில், வழக்கு இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்றம் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருப்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.மறுபுறம், பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சருக்கு இன்றைய விசாரணையில் நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
எனினும், அந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஆஜராகாததற்கான காரணம் ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம், அவரை செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Tamil Nadu politics in turmoil Former DMK minister Ponmudi in trouble Court issues arrest warrant