பாலியல் வன்கொடுமை வழக்கு; தெஹல்கா இதழின் நிறுவனர் தருண் தேஜ்பால் குற்றவாளி என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!
Bombay High Court convicts Tehelka magazine founder Tarun Tejpal in sexual assault case
பெண் பத்திரிகையாளர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், தெஹல்கா இதழின் நிறுவனர் தருண் தேஜ்பால் குற்றவாளி என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நம்பரில் கோவாவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த தெஹல்கா இதழின் விழாவின் போது, அதன் நிறுவனர்களில் ஒருவரான தருண் தேஜ்பால் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, தாக்கியதாகவும் பெண் பத்திரிகையாளர் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதையடுத்து, தேஜ்பால் கைது செய்யப்பட்டு 07 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை கோவா செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதன்படி, தருண் தேஜ்பாலுக்கு பாதிக்கப்பட்ட பெண் அனுப்பிய செய்திகள், அவர் வழக்கமான முறையில் நடந்துகொள்ளவில்லை என்பதையும், அவர் அதிர்ச்சியடையவோ அல்லது பயப்படவோ இல்லை என்பதையும் நிரூபிக்கின்றன எனக் கூறி தருண் தேஜ்பாலை கடந்த 2021-ஆம் ஆண்டு விடுவித்தது.
இதை எதிர்த்து கோவா அரசு, மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின்போது, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சல் கடிதம் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்பட்டது. அத்துடன், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று எந்தவொரு பொதுவான விதியும் இல்லை என கோவா அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

கோவா அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'ஒரு பெண் 'வேண்டாம்' என்றால் அதற்கு 'வேண்டாம்' என்றுதான் பொருள்' என்ற வலுவான செய்தியை சமூகத்துக்கு உணர்த்த தருண் தேஜ்பாலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
அந்தவகையில் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரான தருண் தேஜ்பால், 'தனக்கு 62 வயதாகிறது. நான் அரசியல் ரீதியிலான பழிவாங்கலுக்கு ஆளான நபர். எனக்கு மனைவி இருக்கிறார். இதற்கு மேல் சொல்வதற்க ஒன்றுமில்லை. மேல்முறையீடு செய்வது மட்டுமே எஞ்சியுள்ள ஒரே வழி. தயவு செய்து என் மீது கருணை காட்டுங்கள். குறைந்தபட்ச தண்டனையை வழங்குங்கள்' என முறையிட்டார்.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கோவா செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்து, தருண் தேஜ்பால் குற்றவாளி என அறிவித்தது. அத்துடன், தருண் தேஜ்பாலுக்கான தண்டனை விவரம் பிற்பகல் 02.30 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்துள்ளதால், அவருக்கு கட்டாயமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அல்லது ஆயுள் தண்டனை வரையிலும் இது நீட்டிக்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Bombay High Court convicts Tehelka magazine founder Tarun Tejpal in sexual assault case