'எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சொல்ல வேண்டாம்; இலவசங்கள் கொடுக்க நிதி இருக்கிறது.. செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க இல்லையா..?' தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி..!
Supreme Court questions Tamil Nadu government on whether it has funds to provide freebies or not to pay salaries to nurses
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் செவிலியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். நிரந்தரமாக நியமிக்கப்படும் செவிலியர்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் குறைவான சம்பளத்தில் இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதற்கு தீர்வு வழங்கக்கோரி செவிலியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சம வேலைக்கு; சம ஊதியம் என்ற அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை எனக் கூறி, அரசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மீண்டும் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத். சந்திப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, இந்த விவகாரத்தில், உத்தரவு பிறப்பித்து, 2,000 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில், அதை ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளீர்கள்..?என, தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்கு, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'செவிலியர்கள் நியமிக்கப்படுவதில் மத்திய அரசின் திட்டத்தை நாங்கள் சார்ந்து இருக்கிறோம் என்றும், இந்த திட்டத்தின் கீழ், 440 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் தமிழக அரசுக்கு வழங்காமல் இருக்கிறதாகவும், அந்த நிதி கிடைத்தால் தான் எங்களால் செவிலியர்களுக்கு முழு ஊதியங்களை வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், 'எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு தேவைப்படுகிறது என்றால் நீங்களாகவே தனியாக ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதை செயல்படுத்த வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன், உங்களுக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்குவது உங்கள் கடமை என்றும், அதை நீங்கள் எந்த சூழலிலும் தட்டிக் கழிக்க முடியாது என்றும் கோபமாக கூறியுள்ளனர். குறிப்பாக, பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக செவிலியர்களை நிரந்தர பணி நியமனம் செய்யாமல் உள்ளதாகவும், இலவசங்களை கொடுக்க மட்டும் உங்களுக்கு பணம் இருக்கிறது; ஆனால் செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா..? என சரமாரிய கேள்வி கேட்டுள்ளனர்.

மேலும், தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறது என்பதை எங்களிடம் கூறுங்கள் என்றும், தமிழக அரசு அனைத்திலும் வளர்ந்த மாநிலம், பொருளாதார ரீதியிலும் செல்வாக்கு மிக்க மாநிலமாகத்தான் இருக்கிறது என சொல்கிறீர்கள். ஆனால் சேவை செய்யும் செவிலியர்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்க மறுக்கிறீர்கள். இதை கண்டிப்பாக ஏற்க முடியாது என நீதிபதிகள் தமிழக அரசை கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். 'இந்த விவகாரத்தில் மத்திய அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்' என, நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.
English Summary
Supreme Court questions Tamil Nadu government on whether it has funds to provide freebies or not to pay salaries to nurses