கரூர் சம்பவம்: உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான சிபிஐ விசாரணைக் குழு கரூருக்கு வருகை!
Supreme Court judge arrived Karur incident CBI DMK TVK
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகப் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் இன்று கரூருக்கு வருகை தந்தனர்.
விசாரணைக் குழுவின் செயல்பாடு
உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையிலான எஸ்.ஐ.டி. விசாரித்து வந்த நிலையில், அதற்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி ரஸ்தோகி தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளான சோனல் மிஸ்ரா, சுமித் சரண் மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக் குழுவை நியமித்தது.
நேற்று டி.ஐ.ஜி. அதுல்குமார் தாகூர், கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின், சம்பவ இடமான வேலுச்சாமிபுரத்திற்குச் சென்று ஆய்வு செய்தார். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதி, விஜய் உரையாற்றிய வாகனத்தின் இடம், பொதுமக்கள் சிதறி ஓடிய இடங்கள் குறித்து அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்தனர்.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மேற்பார்வைக் குழுவினர் கரூரில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வந்து, ஏற்கனவே அங்குள்ள சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, இந்த விசாரணைக் குழுவினர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உரிய விசாரணை மேற்கொள்ள உள்ளனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் இந்தக் குழுவினரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர்.
English Summary
Supreme Court judge arrived Karur incident CBI DMK TVK