ரூ.450 கோடி ரொக்க பணமாக கொடுத்து சசிகலா வாங்கிய சுகர் மில்! சிபிஐ வழக்கு பதிவு!
Sugar mill Sasikala CBI Case
காஞ்சிபுரம் பத்மாவதி சர்க்கரை ஆலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யில் புகார் அளித்தது. ஆனால் உடனடி விசாரணை நடைபெறாததால் வங்கி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூன் மாதம், சி.பி.ஐ. அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. காஞ்சிபுரம் சர்க்கரை ஆலையைச் சார்ந்த வங்கி கணக்குகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தது.
இந்த விசாரணையின் போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளாக மொத்தம் ரூ.450 கோடியை ரொக்கமாக கொடுத்து, பத்மாவதி சர்க்கரை ஆலையை வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், அதில் ஆலையின் உரிமையாளர்கள் கையொப்பமிட்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சசிகலா ரூ.450 கோடியை எவ்வாறு செலுத்தினார் என்பது தொடர்பாக 2019ல் வருமான வரித்துறை அதிகாரிகள் அவருடைய இல்லத்தில் சோதனை நடத்தி, பின்னர் நோட்டீஸ் அனுப்பியதும் தெரியவந்தது.
தற்போது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கில் இந்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் சசிகலா மற்றும் சர்க்கரை ஆலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Sugar mill Sasikala CBI Case